தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்கள் இரண்டு மணிநேரம் தாமதமாக வந்ததால், கால் கடுக்க காத்திருந்த மாணவர்கள் பேருந்தை தவறவிட்டு தங்களது கிராமத்திற்கு நடந்தே சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றானில் ரூ.160 இலட்சம் மதிப்பில் உயர்நிலைப் பள்ளிக் கட்டப்பட்டு வருகிறது.

இந்த உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தை பார்வையிடுவதற்காக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜீ மற்றும் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் வர இருப்பதாக அரசு பள்ளிக்குத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, பள்ளியில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஆசிரியர்களும், மாணவர்களும் தயாராக இருந்தனர்.

அமைச்சர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் என்று சொல்லிக் கொண்டே இருந்தனர் அந்த பகுதி எம்.எல்.ஏ. ஆனால், பள்ளி முடியும் நேரமான 4 மணியாகியும் அமைச்சர்கள் யாரும் வரவில்லை.

ஒருவழியாக அமைச்சர்கள், இரண்டு மணிநேரம் தாமதமாக மாலை 5.50 மணிக்கு புதியதாக கட்டப்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு மேற்கொண்டபின், அரசு பள்ளி மாணவர்களைச் சந்தித்தனர். அவர்களின் கல்வித்திறன் பற்றியும் கேட்டறிந்தனர்.

இந்த சந்திப்பின்போது, திருமதி.கு.உமாமகேஸ்வரி எம்.எல்.ஏ மற்றும் திரு.ஆர்.சுந்தரராஜன் எம்.எல்.ஏ ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த ஆய்விற்கு அமைச்சர்கள் இரண்டு மணிநேரம் தாமதமாக வந்ததால், அதுவரை மாணவர்களும், ஆசிரியர்களும் கால் கடுக்க காத்துக்கிடந்தனர்.

அமைச்சர்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததால், ஆய்வு முடியும்வரை காத்திருந்த மாணவர்கள் தங்கள் கிராமத்திற்கு செல்லும் பேருந்தை தவற விட்டனர். பின்னர், வேறுவழியின்றி மாணவர்கள் தங்கள் கிராமத்திற்கு நடந்தேச் சென்றனர்.