பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம்... எப்போனு தெரியுமா? அறிவித்தார் மா.சுப்ரமணியன்!!
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் இதுவரை 92,522 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி இறுதிக்குள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி பெறுவார்கள். தகுதி உடையவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ள வேண்டும். இனி ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் தமிழகத்தில் 600 இடங்களிலும் சென்னையில் 160 இடங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான சிறப்பு தடுப்பூசி முகாம். சனிக்கிழமை அன்று வழக்கமான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறும். நோய் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவல் அதிகமாக இருக்கிறது.
பொங்கல் பண்டிகைக்காக நிறைய பேர் கிராமத்துக்கும் சொந்த ஊருக்கும் சென்று உள்ளனர். இதனால் பாதிப்பு வருமா என்பது இரண்டு நாட்களில் தெரியவரும். மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் முடிவு தெரிந்தவுடன் கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பாதிப்பு ஏறி இறங்கும் என்பதால் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.