”அரிசியின் அளவை குறைக்க உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளது” - காமராஜ் விளக்கம்...
பொது விநியோக திட்டத்தினை செயல்படுத்துவதில் இருந்து அரசு விலகியது போல் ஸ்டாலின் தவறான செய்திகளை கூறி வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என்பது உள்ளிட்டவை குறித்து அறிவிப்பு வெளியானது.
வருமான வரி செலுத்தும் நபரை, குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள், தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொணட குடும்பங்கள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய - மாநில, உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய - மாநில தன்னாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள், பல்வேறு சட்டங்களின்கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள், நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள். ஏசி. பிரிட்ஜ், 3 அறை கொண்ட வீடு ஆகியன இருந்தாலும், பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடபட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் 5 ஏக்கருக்குமேல் நிலம் வைத்திருந்தாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியானது.
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பொது விநியோக திட்டத்தில் விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார்.
புதிய நிபந்தனைகள் அடங்கிய அரசிதழை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற வேண்டும் என்றும், நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அந்தியோதயா அன்ன யோஜனா பயனாளிகள் உள்ளிட்ட 98 லட்சம் குடும்பங்கள் கண்டறியப்பட்டு இனையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொது விநியோக திட்டத்தினை செயல்படுத்துவதில் இருந்து அரசு விலகியது போல் ஸ்டாலின் தவறான செய்திகளை கூறி வருவதாகவும் குறிப்பிட்டார்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்ட்த்தினை தமிழக அரசு அமல்படுத்தி வருவதாகவும், உணவு பாதுகாப்பு சட்டத்தில் பயனாளிகளுக்கு அரிசியின் அளவை குறைப்பதற்கு பதிலாக தமிழக அரசு உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு சட்டப்பிரிவு 32ன் படி அரிசியின் அளவை குறைக்க, உயர்த்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும், மத்திய அரசின் கணக்கீட்டின்படி ஊரக பகுதியில் 62.55 % மக்களும் நகர் புறத்தில் 37.79 % மக்கள் மட்டுமே தகுதி படைத்தவர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.