நள்ளிரவில் வங்கியில் கொள்ளை - மக்கள் திரண்டதால் ரூ.2 கோடி நகைகளை விட்டு சென்ற மர்ம கும்பல்...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மர்ம நபர்கள் ஒன்பது பேர் வேளாண் தொடக்கக் கூட்டுறவு வங்கியில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். மக்கள் திரண்டு வந்ததை அறிந்து தப்பியோடிய கொள்ளையர்கள் வந்த வரைக்கு லாபம் என்று இரண்டு மடிக்கணினிகளை எடுத்து சென்றுவிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த தச்சங்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று உள்ளது.
வார விடுமுறையையொட்டி சனிக்கிழமை மாலை வழக்கம்போல வங்கி மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ள்ளிரவு கூட்டுறவு வங்கியின் பக்கவாட்டு சுவரை மர்மநபர்கள் துளையிட்டு உள்ளனர்.
அந்த நேரத்தில், அவ்வழியே சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மகிமைராசு என்பவரைப் பிடித்து அவரது வாயில் துணியைத் திணித்து கை, கால்களைக் கட்டி அருகே இருந்த கழிவறையில் மர்மநபர்கள் அடைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வந்த மற்றொருவர், வங்கிப் பகுதியில் மர்மநபர்கள் நடமாடுவதை அறிந்து ஊருக்குள் சென்று மக்களைத் கூட்டி வந்துள்ளார். மக்களின் சலசலப்பு கேட்ட மர்மநபர்கள், வங்கியில் இருந்த இரண்டு மடிக்கணினிகளை மட்டு களவாடிக் கொண்டு தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் கந்தர்வகோட்டை காவலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் வந்த காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், வங்கியை, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அ.ஆறுமுகம் பார்வையிட்டார். காவலாளர்கள் விசாரணையில், வங்கியில் சுமார் 2 கோடி மதிப்பில் நகைகள் இருப்பதாகவும், கொள்ளை முயற்சியில் ஒன்பது பேர் கொண்ட குழு ஈடுபட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
தப்பியோடிய மர்ம நபர்களை காவலாளர்காள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்டிருப்பதை பார்த்து மக்கள் கூடியதால் 2 கோடி நகைகள் தப்பித்தன. இல்லையென்றால் என்ன நடந்து இருக்கும் என்பதை எண்ணி அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.