மிரட்டும் மிக்ஜாம்.. உதவ களமிறங்கும் கோவை - பாதிப்புகளை சீரமைக்க சென்னை புறப்பட்ட 400 தூய்மை பணியாளர்கள்!
Coimbatore : மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை சீரமைக்க கோவை மாநகராட்சியில் இருந்து சுமார் 400 தூய்மை பணியாளர்கள் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
![michaung cyclone coimbatore corporation workers coming chennai to help in cleaning process ans michaung cyclone coimbatore corporation workers coming chennai to help in cleaning process ans](https://static-ai.asianetnews.com/images/01hgw0ay2n7r131bfdcxqsvjsd/coimbatore_363x203xt.jpg)
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நீர் தேங்கி இருப்பதுடன், கழிவுகளும் ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஆகவே வெள்ள பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடுகளை சீரமைக்க தமிழகம் முழுவதும் இருந்து தூய்மை பணியாளர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோவை மாநகராட்சியில் இருந்து முதல் கட்டமாக இன்று 400 தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு 10 பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 5 லாரிகளில் தூய்மை பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தங்குவதற்கு தேவையான பாய், தலையனை, உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், முதல் உதவி சிகிச்சை பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை மொத்தமாக சாப்பிட்ட மாணவன் பலி; சக மாணவர்கள் கதறல்
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நேரடியாக தூய்மை பணியாளர்களிடம், தூய்மை பணியின்போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை சொல்லி வழியனுப்பி வைத்தார். முதல் கட்டமாக 400 பேர் கோவை மாநகராட்சியில் இருந்து அனுப்பப்படுவதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் பணியாளர்கள் பின்னர் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகர்ரன் தெரிவித்தார்.
கோவையில் இருந்து செல்லும் குழுவினருக்கு காஞ்சிபுரத்தில் இருந்து எங்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை அங்குள்ள அதிகாரிகள் கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.