சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல கூலிப்படை...! தாய்க்கு துரோகம் செய்ததால் மகனே "போட்டுத்தள்ள ப்ளான்"..!
தாயை விட்டு வேறுவொரு பெண்ணுடன் வாழும் தந்தையைக் கொல்ல கூலிப்படை கொண்டு கொல்ல திட்டமிட்ட மகனிடம் போலீசார் விசாரணை.
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் கதிர்வேல். கதிர்வேலின் முதல் மனைவி வளர்மதி. இவர்களின் மகன் விவேக். மசாலா தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் விவேக் வேலை பார்த்து வருகிறார்.
இன்ஸ்பெக்டர் கதிர்வேலும், அவரது முதல் மனைவி வளர்மதியும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். வளர்மதியை பிரிந்த கதிர்வேல், வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விவேக், தனது தந்தை கதிர்வேலை மிரட்ட கூலிப்படை ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. கூலிப்படையை தனது நண்பர் சுதாகர் மூலம் விவேக் வரவழைத்துள்ளார்.
இதற்காக பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜோஷ், செல்வகுமாரை சென்னைக்கு வரவழைத்துள்ளனர். அவர்களுக்கு ரூ.2 லட்சம் ரூபாய் விலையும் பேசப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சப் இன்ஸ்பெக்டர் கதிர்வேலை மிரட்ட கூலிப்படை வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், தாயை பிரிந்து வேறுவொரு பெண்ணுடன் வாழும் சப் இன்ஸ்பெக்டர் கதிர்வேலுவைக் கொல்ல, விவேக் கூலிப்படை அமைத்திருக்கலாம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தொடர்ந்து விவேக், அவரது நண்பர் சுதாகர், கூலிப்படையைச் சேர்ந்த ஜோஷ், செல்வகுமார் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.