செந்தில் பாலாஜி மூளையில் பாதிப்பு; முதுகெலும்பில் வீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை தாக்கல்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
![Medical report of Minister Senthil Balaji has been submitted in Supreme Court smp Medical report of Minister Senthil Balaji has been submitted in Supreme Court smp](https://static-ai.asianetnews.com/images/01hfpbtjxyf4kwk83r85wz3w3m/asianet-news--7-_363x203xt.jpg)
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மருத்துவ காரணத்தைக் கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என கூறி அவரது ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் வருகிற 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.8.20 லட்சம் கோடி வருவாய்: அதிரவைக்கும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பின்னணி!
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு பித்தப்பை கற்கள் இருப்பதாகவும், நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் என்றும், இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும் அந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 11ஆவது முறையாக மீண்டும் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. அவரது நீதிமன்றம் காவலை வருகிற டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, அவருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.