தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் தற்பொழுது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஆயிரத்து 382 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஆயிரத்து 472 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு - 241, கோயம்புத்தூர் - 104, திருவள்ளூர் - 85 , காஞ்சிபுரம் - 49, கன்னியாகுமரி – 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தெற்றானது பொதுமக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருத்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருந்ததே காரணம் என கூறப்படுகிறது.

இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தவிர்த்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் சரியாக வாய் மற்றும் மூக்கை மூடியவாறு அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்தல், உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் தொற்று பரவலை கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும் என்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடமும், கொரோனா வழிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் மீதும் தற்போது நடைமுறையிலுள்ள தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.