மதயானையாக மாறிய மசினி பாகனை கொன்று சிதைத்தது எதனால்? இதற்கு காரணம் யார்?
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானை ‘மசினி’. இந்த யானைக்கு எதிர்பாராதவிதமாக திடீரென இன்று மதம் பிடித்தது. மதம் பிடித்தவுடன் கோயில் வளாகத்தை சுற்றி சுற்றி அந்த யானை வந்தது. அப்போது பாகன் கஜேந்திரன் யானையை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் கோபத்தில் இருந்த யானை மசினி, கஜேந்திரனை மிதித்தே கொன்று உடலை சிதைத்தது. இதனால் கஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், முதுமலையில் அமைதியாக, அன்பாக இருந்த மசினி யானையை கொலைகார யானையாக மாற்றிய பெருமை நம்மையே சேரும் என ஒரு தகவல் சமூகவளைதலங்களில் வைரலாகிவருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு முதுமலை வனப்பகுதியில், கார்குடி பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் தாயை பிரிந்த நிலையில் 6 மாத குட்டியாக மீட்கப்பட்டது தான் மசினி யானை. அங்குள்ள மசினியாம்மன் கோவில் அருகே அந்த யானை மீட்கப்பட்டதால் அதற்க்கு மசினி என பெயர் இடபட்டது. குட்டி யானை என்பதால் வனத்துறையினர் மிகவும் கவனம் செலுத்தி அந்த யானையை பிழைக்க வைத்து வளர்ப்பு யானையாக மாற்றினர்.
குட்டி யானை என்பதால் முகாமில் அந்த யானை தான் செல்ல யானை. பாகன்களிடம் அன்பாக பழகுவது, வனத்துறை அதிகாரிகளுடன் விளையாடுவது, அருகில் வந்து புகைப்படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளிடம் அன்பாக நடந்து கொள்வது என நல்ல குணங்களுடன் அந்த யானை இருந்து வந்தது.
முதுமலை யானைகள் முகாமில் உள்ள விநாயகர் கோவிலில் அந்த யானை மணி அடித்து விநாயகரை வழிபாடும் காட்சி காண்பதற்கு அற்புதமாக இருக்கும். கடைசியில் அந்த காட்சிகள் தான் அந்த யானையின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. காரணம் மசினி யானை மணி அடித்து சாமி கும்பிடுவதை பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சிகளில் பார்த்த அப்போதைய அரசு 2015 ஆம் ஆண்டு மசினி யானையை திருச்சி சமயபுரம் கோவிலுக்கு கொண்டு செல்ல உத்திரவிட்டது.
மசினி யானையை திருச்சி கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு எழுந்தது. மசினி வனப்பகுதி மிக்க சூழலில் வாழ்ந்ததால் அதனால் திருச்சி போன்ற இடங்களில் இருக்க முடியாது. எனவே மசினி யானையை திருச்சி கொண்டு செல்லும் முடிவை கைவிட வேண்டுமென முதுமலை யானை பாகன்கள், வனத்துறையினர், வனஉயிரின ஆர்வலர்கள், பத்திர்ககையாளர்கள் என பலரும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு சற்றும் காது கொடுத்து கேட்காமல் மசினி யானையை திருச்சிக்கு கொண்டு சென்றது.
அனைவரும் அச்சப்பட்டது போலவே வனப்பகுதி மிக்க சூலில் வாழ்ந்து வந்த மசினியால் திருச்சியில் இயல்பாக வாழ முடியவில்லை. அதன் விளைவாகவே இன்று யானை பாகனை மசினி மிதித்து கொன்றுள்ளது.
அந்த யானையை மீண்டும் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வந்தால் மட்டுமே அது பழைய நிலைமைக்கு திரும்பும் என தகவல்கள் சமூகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.