Marxist Lenin Communist emphasis on removing nuclear reactors waste

கன்னியாகுமரி

கூடங்குளம் அணு உலை கழிவுகளை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியினர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் வாங்கினார்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களை ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன்படி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு (விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில், நிர்வாகிகள் மணவை கண்ணன், சுசீலா உள்ளிட்டோர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

அதில், "அணு உலைகள் ஆபத்தானவை. அது அனைவரையும் பாதிக்கும் தன்மையானது. இயற்கை சீற்றம் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே தாக்கும், அழிக்கும். அணு உலை கதிர்வீச்சு இடைவிடாது அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. 

ஜெர்மனியில் மக்களுக்கு ஆபத்து இல்லாத சூரிய மின்சாரம் தயாரித்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்திவிட்டு எஞ்சியதை பிற நாடுகளுக்கும் வழங்குகிறது. ஆனால், இந்தியாவில் ஆட்சியாளர்கள் கமிஷன் திட்டங்களால் சூரியனை விட்டு, மக்களை அழிக்கும் ஆபத்து நிறைந்த கூடங்குளம் அணு உலை திட்டங்களை அபிவிருத்தி செய்கிறார்கள்.

அணு கழிவு கதிரியக்கத்தால் மக்கள் மடிவதற்கு முன், கூடங்குளம் இருப்பது நெல்லை மாவட்டம் என்று பார்க்காமல், தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், உயர் அதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று, கூடங்குளம் அணு உலை கழிவுகளை விரைவாக அங்கிருந்து அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.