உதவி தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருக்கும் போராட்டம்...
திருவண்ணாமலை
நிறுத்திய உதவி தொகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதரவற்ற முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர், மாற்றுத் திறனாளி, விதவை மற்றும் முதிர்கன்னிகளுக்கு வழங்கி வந்த உதவித்தொகை நிறுத்தியதை திரும்ப வழங்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் அனைத்து தாலுகாக்களிலும் தாசில்தாரிடம் உதவித்தொகை கோரி வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் முன்னிலை வகித்தார். இந்தப் போராட்டத்தை மாநிலக்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தொடங்கி வைத்தார்.
இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தின் அருகிலேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும், இந்தப் பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.