Marxist Communist Party Struggle to give crop Insurance amount
நாகப்பட்டினம்
உடனே பயிர்க் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், செம்பியன்மகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
"2016-2017-ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்தும்,
உடனே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்ககோரியும்" இந்தக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க நாகை ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. நாகைமாலி போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்தப் போராட்டத்தில், "கடந்த 2016-2017-ம் ஆண்டு விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதைதொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வில்லை.
எனவே, 2016-2017-ம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய பயிர்க்காப்பீட்டு தொகை உடனே வழங்க வேண்டும்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பகு, ராஜேந்திரன், சுப்பிரமணியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ராஜா, ஜீவாராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
