சீமைக் கருவேல மரங்களை வேறோடு அகற்றிட பொதுமக்களுக்கு மார்ச் 20 கெடு…
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான சீமைக் கருவேல மரங்களை மார்ச் 20-க்குள் வேறோடு அகற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கெடு அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கருவேல மரங்களை வேருடன் அழிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள் கிழமை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியது:
“சென்னை உயர்நீதிமன்ற, மதுரை கிளை உத்தரவின்படி, சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க வேண்டும்.
அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் சீமைக் கருவேல மரங்களை பற்றிய கணக்கெடுப்பு செய்து அதனை மாவட்ட நிர்வாகத்திடம் மார்ச் 1-ஆம் தேதி அறிக்கையாக வழங்க வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதால் நிலத்தடி நீர் ஆதாரம் உயரும். இல்லையெனில் மீண்டும் அது துளிர்த்துவிடும்.
பொதுமக்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை மார்ச் 20-ஆம் தேதிக்குள் வேரோடு அகற்றிட வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் தங்கள் நிலங்களில் உள்ள மரங்களை அகற்றத் தவறினால் அரசுத் துறைகளே அதனை அகற்றி உரியவர்களிடமிருந்து அதற்கான தொகையை இரு மடங்காக வசூலிக்கும்.
எனவே பொதுமக்கள் தங்கள் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வருகிற மார்ச் 20-க்குள் விரைந்து அகற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஆட்டோக்களில் கருவேல மரங்கள் அகற்றுவது குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லையை ஒட்டினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் கார்குழலி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.