நாட்டிலேயே தமிழகம் தான் அதிக அளவில் கடன் பெற்றிருப்பதாக ராகுல் காந்தியின் ஆலோசகர் பிரவீன் காந்தி தெரிவித்த கருத்துக்கு திமுக கூட்டணிக்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்றக் கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது. கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியின் ஆலோசகர் பிரவீன் காந்தி, “நாட்டிலேயே தமிழக அரசு தான் அதிக அளவில் கடன் பெற்றிருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு அதிரடியைக் கிளப்பினார். இவரது கருத்துக்கு கூட்டணிக்கட்சி தலைவர்களான வைகோ, திருமாவளவன் உட்பட பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “VCK, MDMK, CPI & CPM கட்சிகள் இந்தியா எதிர்கட்சி தலைவர் அவர்களிடம் “நடவடிக்கை எடுக்க” கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி நாளேட்டில் செய்தி படித்தேன், ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது?

தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா? தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை ரவிக்குமார், துரைவைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் “உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்” என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா?

கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல.

ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். கம்யூனிஸ்ட் தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், அண்ணன் வைகோ, திருமாவளவன் அண்ணனும், கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் “லக்ஷ்மண் ரேகை”யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.