வாணியம்பாடி அருகே பயங்கர விபத்து….மாங்காயுடன் லாரி கவிழ்ந்ததில் 8 பேர் பலி….
வாணியம்பாடி அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்தது மாங்காய்கள் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் உள்ள மாந்தோப்புகளில் இருந்து வேலூரை அடுத்த நாட்டறம்பள்ளியில் உள்ள ஒரு மாம்பழச் சாறு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள் சிலர் மினி லாரி ஒன்றில் மாங்காய்களை ஏற்றி வந்தனர்.
அந்த மினி லாரி அங்கிருந்து புறப்பட்டு திம்மாம்பேட்டை வழியாக நாட்டறம்பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அந்த லாரியில் டிரைவர் அருகிலும், அதில் ஏற்றப்பட்டிருந்த மாங்காய்கள் மீதும் வியாபாரிகள், தொழிலாளர்கள் என 32 பேர் அமர்ந்திருந்தனர்.
ஆந்திர-தமிழக எல்லையில் மலைப்பாதை வழியாக நாயனூர் என்ற இடத்தின் அருகே லாரி நேற்று இரவு 9.30 மணியளவில் வந்தபோது மலைப்பாதையில் உள்ள திருப்பத்தில் திரும்ப முயன்றபோது எதிர்பாராதவிதமாக லாரி 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து நடந்த இடம் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காயம் அடைந்த 25 பேரையும் அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இங்கு நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டியை சேர்ந்த சிறுவன் ஒருவரும் உயிரிழந்தார்.
விபத்து நடந்த இடம் வனப்பகுதி என்பதால் மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விபத்து இரவு நேரத்தில் நடந்ததால் மீட்புப்ணிகள் முழுமையான நடைபெறவில்லை.
விபத்தில் சிக்கியவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில், ஆகியோர் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த விபத்து வேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.