Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி!

தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Makkal needhi maiam kamalhaasan to contest one of the constituencies allotted to the Congress smp
Author
First Published Feb 18, 2024, 3:09 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. எனவே, இரு கட்சிகளும் தங்களது தலைமையில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடும் என தெரிகிறது. இதனால், தமிழகத்தில் இந்த முறை மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகள் அப்படியே தொடர்கின்றன. அத்துடன், இந்த முறை புதிதாக சில கட்சிகள் கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு தொகுதியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைவரையும் அரவணைத்து செயல்படுவேன்: செல்வப்பெருந்தகை!

திமுகவுடனான கூட்டணி குறித்து மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையென்றாலும், மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில், கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால், காங்கிரஸ் மூலம் அவர் கூட்டணிக்குள் வர வாய்ப்புள்ளதாகவும், காங்கிரஸுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் இருந்து அவருக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேபரேலி தொகுதி காந்தி குடும்பத்துக்குத்தான்: ஜெய்ராம் ரமேஷ்!

மக்கள் நீதி மய்யம் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த கையோடு, அவரது கட்சியை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தார் கமல்ஹாசன். அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.77 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம்  கட்சி களமிறங்கியது. ஆனால், தோல்வியை தழுவியது. கோவையில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார்.

ஆனால், எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு கண்டிப்பாக அங்கீகாரம் பெற்று விட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள். தனித்து நின்றால் சாதிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், கூட்டணி அமைத்து கமல்ஹாசன் தேர்தல் களம் காணவுள்ளதாக கூறுகிறார்கள். கமல்ஹாசனை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பல்வேறு தருணங்களில் காங்கிரஸுக்கு ஆதரவாக பாஜகவுக்கு எதிரான கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த அவர், பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் டெல்லியில் கைக்கோர்த்தார்.

எனவே, திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளை சேர்த்து காங்கிரஸ் கேட்டு பெறும் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios