அதிக ஒலி எழுப்பியதால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு சரமாரி அடி உதை...
வேலூர்
வேலூரில், அதிக ஒலி எழுப்பியதால் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை சரமாரியாக தாக்கிய மூவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் இருந்து வெலக்கல்நத்தம் செல்லும் அரசு நகர பேருந்து கடந்த 19-ஆம் தேதி புறப்பட்டது. அந்த பேருந்தை ஓட்டுநர் திருநாவுக்கரசு ஓட்டினார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை சந்தை வழியாக செல்லும்போது, திருநாவுக்கரசு அதிக ஒலி எழுப்பியுள்ளார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற கல்நார்சம்பட்டியை சேர்ந்த சிலம்பரசன் (20), திவாகர் (19), புஷ்பராஜ் (20) ஆகிய மூவரும் பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், ஆத்திரமடைந்த அந்த மூவரும், ஓட்டுநர் திருநாவுக்கரசு, நடத்துநர் கமலேசன் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசு, கமலேசன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவலாளர்கள் வழக்குப்பதிந்து சிலம்பரசன், திவாகர், புஷ்பராஜ் ஆகிய மூவரும் கைது செய்தனர்.