Mahadevan funeral - Natarajan ttv News Participation

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவன் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. அவரின் இறுதிசடங்கில் சசிகவின் கணவர் நடராஜன், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற குழு தலைவருமான சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவன்.

இவர் தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று காலை கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது.

தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, மகாதேவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மகாதேவனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள டி.டி.வி. தினகரனும், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, தங்கமணி, எஸ்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேற்றே தஞ்சாவூர் விரைந்தனர்.

இந்நிலையில் மகாதேவனின் உடல் தஞ்சாவூர் கரந்தை மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

மகாதேவனின் இறுதி சடங்கில் சசிகலாவின் கணவர் நடராஜன், அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். நடராஜனும் டிடிவி தினகரனும் நன்றாகவே பேசி கொண்டனர்.

மேலும் அதிமுக அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு ஆகியோரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.

இதனிடையே சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் மகாதேவனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாது என்ற தகவல் வெளியானது.

ஆனால் நடராஜன் இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது நல்ல ஆரோக்கியத்துடனே காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.