2028 ஆம் ஆண்டு முதல் மதுரை எய்மஸ் மருத்துவமனை முழுமையாக செயல்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மதுரை மாவட்டம்‌ தோப்பூரில்‌ கடந்த 2019ஆம்‌ ஆண்டு எய்ம்ஸ்‌ மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர்‌ நரேந்திர மோடி அடிக்கல்‌ நாட்டினார்‌. சுமார் 224.24 ஏக்கர்‌ பரப்பளவில்‌ சுமார்‌ 750 படுக்கைகளுடன்‌ அமைக்கப்படும்‌ என்று தெரிவிக்கபப்ட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று கூறப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் மட்டுமே இதுவரை கட்டப்பட்டுள்ளது.

ஆனால் நிகழ்வாண்டிற்கான எய்ம்ஸ்‌ மருத்துவ கல்லூரிக்கான மாணவர்‌ சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம்‌ மருத்துவ கல்லூரியில்‌ வகுப்பு
நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, ஜைக்கா நிறுவனம்‌ சார்பில்‌ மருத்துவமனை வரைபடம்‌ தயாரிக்கும்‌ பணி முடிவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார் 1,977 கோடி ரூபாய் மொத்த திட்ட மதிப்பில் இதுவரை ரூ. 1,500 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள நிதியை இந்த ஆண்டும் அக்டோபர்‌ 26 தேதிக்குள்‌ ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தற்போது மதுரை எய்ம்ஸ்‌ மருத்துவமனைக்கான திட்டறிக்கை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில்‌, 2023ஆம்‌ ஆண்டு வரை எய்ம்ஸ்‌ மருத்துவமனை கட்டடத்திற்கான வரைபட அனுமதி, சுற்றுச்சூழல்‌ ஆணைய அனுமதி உள்ளிட்ட பணிகள்‌ நடைபெறும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்‌, 2026ஆம்‌ ஆண்டு வரை கட்டட பணிகள்‌ நடைபெறும்‌ எனவும்‌ 2028ஆம்‌ ஆண்டு முதல்‌ மதுரை எய்ம்ஸ்‌ மருத்துவமனை முழுமையாக செயல்படும்‌ என அறிக்கையில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நெல்லை கல்குவாரி விபத்து .. கனிமவளத்துறை இயக்குனர் சஸ்பெண்ட்.. கல்குவாரி உரிமையாளர் வங்கி கணக்கு முடக்கம்...