பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்த  மீண்டும் தமிழக அரசு அனுமதி அளித்ததால் மதுரை ஆதினம் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

பட்டினப் பிரவேசத்திற்கு அனுமதி

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்‍கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததற்கு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாரம்பரிய விழாக்‍களில் அரசு தலையிடக்‍கூடாது என்றும் கூறியிருந்தனர். இதனை தொடர்ந்து பல்வேறு ஆதினங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது பட்டினபிரவேச நிகழ்ச்சி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்தது. 

அனுமதி வழங்கிய முதல்வருக்கு நன்றி

இந்தநிலையில் தருமபுரம் ஆதீனம் மடத்தின் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், 293 வது மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரியர் ஆதின மடத்தின் வெளியே மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர். ஆதீன மடங்களின் சமய, சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டும் என்றும், எல்லோரையும் அனுசரித்து போக வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வதாக கூறினார். பட்டின பிரதேசம் நடத்துவது குறித்து என்னுடைய கோரிக்கையை வைத்திருந்தேன்.அதனை ஏற்ற முதல்வருக்கும், அறநிலைத்து துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார். மேலும் முதல்வர் அனைத்து சமூகத்தையும் அரவணைத்துப் போக வேண்டும். என்றும் பட்டின பிரவேசத்துக்கு முதல்வர் அனுமதி அளிப்பார் என தான் நினைக்கவில்லை எனவும் கூறினார். 

உலகறிய செய்த கி.வீரமணிக்கு நன்றி

பட்டின பிரவேசம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த நிலையில், அதை சர்ச்சையாக்கி இப்போது உலகறியச் செய்த திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக கூறினார். அமைச்சர்கள் சாலையில் நடமாட முடியாது என மன்னார்குடி ஜீயர் தெரியாமல் சொல்லி விட்டார், இனிமேல் அப்படி சொல்ல மாட்டார் எனவும் தெரிவித்தார். மதுரை ஆதீன மடத்தில் பாஜக, இந்து அமைப்புகள் தலையீடு இருப்பதை பற்றி யார் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் அதை கண்டுகொள்ள போவதில்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நினைத்தால் நினைத்துக்கொள்ளுங்கள் எனக்கூறினார். பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு கேட்கும் முடிவு குறித்த கேள்விக்கு, பதில் அளித்த அவர், மத்திய அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றார். மற்ற ஆதீனங்கள் அனைவரும் அவர்களோடு அடிபணிந்து செல்கின்ற பொழுது நான் மட்டும் ஏன் எதற்காக எதிர்த்து நிற்க வேண்டும். அந்த காரணத்தினால் நானும் அவர்களோடு ஒன்றிணைந்து போய்விட்டேன் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் ஊரோடு ஒத்துப் போய் விட்டேன் என்று சொல்லி அதற்கான ஒரு திருக்குறளையும் மதுரை ஆதினம் ஒப்பித்தார்.