கருணாநிதியின் உருவப்படத்திற்கு பாடை கட்டி, பறை அடித்து, ஒப்பாரி பாடி அஞ்சலி செலுத்திய மதுரை மக்கள்...
கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் மாலை 6.110 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினார்.
பின்னர் அங்கிருந்து மெரினாவுக்கு கொண்டு சென்று அறிஞர் அண்ணாவின் பக்கத்தில் தம்பி கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்டார். கருணாநிதி இறந்த செய்தி வெளியிடப்பட்டதில் இருந்து மெரினாவில் அடக்கம் செய்யப்படும் வரை மொத்த தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியது. அதற்கு தூங்கா நகரமான "மதுரை"யும் விதிவிலக்கு அல்ல.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மினிப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது காமராசபுரம் காலனி. இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கலைஞர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்தப் பகுதியில் இரவு முழுவதும் சோகப் பாடல்களை ஒலிபரப்பினர்.
பின்னர், பந்தல் போட்டு அதில் கருணாநிதியின் உருவப்படம் வைத்து அதற்கு ஒவ்வொருவராக மாலை அணிவித்தனர். கருணாநிதியின் உருவப்படத்தை சுற்றி உட்கார்ந்து கொண்டு ஒப்பாரி பாட்டு பாடி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், நேற்று மாலை 4 மணியளவீல் பாடைக் கட்டி அதில் உருவப்படத்தை வைத்து பறை அடித்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலம் முடிந்ததும் உருவப்படத்தின் முன்பு மொட்டை அடித்துக் கொண்டனர். இந்த ஊர்வலத்தில் பெண்கள், தி.மு.க.கட்சியினர், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.