சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் புதிய சுற்றுலா திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்( நாளை ) ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சொகுசு கப்பலில் பயணம்

பயணம் என்றாலே மிகவும் அலாதியானது, வாழ்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் கடைசி காலத்தில் பணம் மட்டுமே மிஞ்சும், ஆனால் இந்த உலகத்தில் சுற்றிப்பார்க்க எவ்வளவோ நல்ல இடங்கள் உள்ளன, அந்த அழகிய இடத்தை பார்க்காமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள கூடாது. என திரைப்படங்களில் வசனம் வரும் அது போல் தான் கடைசி காலத்தில் பணத்தை மட்டுமே சேமித்து வைக்கும் மனிதர்கள் நல்ல நினைவுகளை இழக்கின்றனர். இதற்காகத்தான் இயற்க்கையான மற்றும் குழுமையான இடங்களை தேடி மக்கள் பயணம் செய்து வருகின்றனர். வசதி உள்ளவர்கள் மட்டுமே சொகுசு கப்பலில் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது நடுத்தர மக்களும் பயணம் செய்யும் வகையில் தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்க்கடலுக்கு சென்று வரும் வகையில் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சமீபத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்திருந்தார். இந்த சுற்றுலா திட்டத்தை வரும் ஜுன் மாதம் 4 ஆம் தேதி( நாளை முதல்) சென்னை துறைமுகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த திட்டத்துக்காக கார்டெலியா க்ரூஸ் ( Cordelia Cruise) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2 வகையான சுற்றுலா திட்டங்கள் 

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. இரண்டு நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக இரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாயும், ஐந்து நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக இரு நபருக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும். 700 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் 11 தளங்கள் கொண்டது. மொத்தம் 796 அறைகள் உள்ளன. இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 4 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுகூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, மசாஜ் செண்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. 

விரைவில் 3 கப்பல்

ஒரே நேரத்தில் 1500 முதல் 2000 பயணிகள், மற்றும் 800 ஊழியர்களை இந்த கப்பல் சுமந்து செல்லவுள்ளது. முதற்கட்டமாக ஒரு கப்பல் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டுக்குள் மேலும் 3 கப்பல்களை இயக்கவுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையை பொருத்தவரை சுற்றுலாவுக்கு முக்கிய இடமாக திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்து நாடுகளில் இருந்தும் சென்னைக்கு சுற்றுலாவுக்கு வருகிறார்கள். அவ்வாறு வரக்கூடிய பயணிகளுக்கு இந்த சொகுசுக் கப்பல் சுற்றுலா திட்டம் மற்றொரு புதிய அனுபவமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

மெரினா கடற்கரையில் நவீன கடைகள்..!சுடுகாட்டில் சீரழியும் அவலம், அதிமுக திட்டத்தை புறக்கணிக்கிறதா திமுக..?