கடனை திருப்பி கேட்டதால் காதலியின் ஆபாச படத்தை உறவினர்களுக்கு அனுப்பிய காதலன்; உடந்தையாக இருந்த தாய் கைது...
கன்னியாகுமரி
காதலியின் வீட்டில் வாங்கிய ரூ.2 இலட்சத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனின் தாயை காவலாளர்கள் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் துறை சுனாமி காலனியைச் சேர்ந்தவர் கில்டா (44). இவருடைய மகன் மவ்ரஸ். இவருக்கும், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மவ்ரஸ், மீன்பிடி தொழிலுக்காக வெளிநாட்டுக்கு சென்றார். அப்போது, மவ்ரசின் தாயார் கில்டா, அந்த மாணவியின் தாயாரிடம் இருந்து ரூ.2 இலட்சம் கடனாக வாங்கியுள்ளார். நீண்ட நாட்கள் ஆகியும் கடனை அவர் திரும்ப கொடுக்கவில்லை.
எனவே, மாணவியின் தாயார், கில்டாவிடம் கடனை திரும்ப கேட்டுள்ளார். பணத்தை திரும்ப கொடுக்க மறுத்த கில்டா இதுபற்றி மகன் வெளிநாட்டில் உள்ள மவ்ரசிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். மேலும், மாணவியின் படத்தை ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, வெளிநாட்டுக்கு செல்லும் முன்பு மாணவியுடன் செல்போனில் எடுத்துக்கொண்ட படங்களை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியும் உள்ளார். இந்த இழி செயலுக்கு மவ்ரசின் தாயார் கில்டா, சகோதரர் பிஜோ ஆகியோர் உடந்தை.
இதனை அறிந்த மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். அவர்,இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் மவ்ரஸ், அவருடைய தாயார் கில்டா, சகோதரர் பிஜோ ஆகியோர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். இது தொடர்பாக மவ்ரசின் தாயார் கில்டா கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்த விசாரணையை காவலாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.