உஷார்...!!! 30ம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் - அத்தியாவசிய பொருட்களை வாங்கி வச்சிகோங்க...!!
சுங்கச்சாவடி வரி வசூலை கண்டித்து வரும் 30 ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்தியா முழுவதும், 363 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில், 41 சுங்க சாவடிகள் உட்பட தென் மாநிலங்களில், 117 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. அதில், 26 சுங்கச்சாவடிகளுக்கானஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. ஆனாலும், அந்த சுங்கச்சாவடிகளி வரி வசூல் செய்யப்படுகிறது. இது கண்டிக்கத்தக்க செயல்.
தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது வாட் வரியை உயர்த்தியுள்ளது. இதையொட்டி, இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 40 ஆயிரம் லாரிகள் தமிழகத்தில் டீசல் பிடிக்காமல் வெளிமாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கின்றன. இதனால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே, உயர்த்தப்பட்ட காப்பீட்டு கட்டணம், வாகன பதிவு கட்டணம், 15 ஆண்டு ஆயுள் கடந்த லாரிகளை அழித்தல், டீசல் மீது வாட் வரி ஆகியவற்றை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளோம்.
தென் மாநிலங்களில் 9.5 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் ஒரு நாளைக்கு ரூ.600 கோடி முதல் ரூ.800 கோடி வரையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும். இது நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில், 1.5 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால், காய்கறிகள், கியாஸ் சிலிண்டர் உள்பட அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது.