மின்னல் வேகத்தில் மோதிய லாரி; மோட்டார் சைக்கிளில் சென்றவர் தூக்கி வீசப்பட்டு பரிதாப பலி...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் மின்னல் வேகத்தில் வந்த லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர், படப்பை பால்வாடி தெருவைச் சேர்ந்தவர் ஜான். இவர் சனிக்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் படப்பையில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்றார். அங்கிருந்து தான் சென்ற வேலையை முடித்துவிட்டு மீண்டும் படப்பை நோக்கி வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
மண்ணிவாக்கம் கூட்டு சாலையில் திரும்புவதற்காகக் ஜான் காத்திருந்தார். அப்போது வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் நோக்கி கருங்கல் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் வந்த லாரி ஜானின் இருசக்கர வாகனத்தின்மீது அதிபயங்கரமாக மோதியது. இதில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆனால், ஜான் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த ஓட்டேரி காவலாளர்கள், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கருங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் கருங்கற்கள் சாலை முழுவதும் சிதறின. பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியைத் தூக்கி நிறுத்தினர். இதனிடையே, பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் சிதறிக் கிடந்த கருங்கற்களும் அகற்றப்பட்டன.
இந்த விபத்து காரணமாக வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த காவலாளர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.