திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்த லாரி ஓட்டுநர் கைது; லாரியும் பறிமுதல் செய்து போலீஸ் அதிரடி...
சிவகங்கை
சிவகங்கையில் திருட்டுத்தனமாக லாரியில் மணல் அள்ளி வந்தவரை காவலாளர்கள் கைது செய்தனர். அவரிடம் இருந்து லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, புதுவயலைச் சேர்ந்தவர் காசி என்பவரின் மகன் முத்து (40). இவருக்கு சொந்தமான லாரியில் நேற்று காரைக்குடியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் கார்த்திக்ராஜா (29) என்பவர் பட்டுக்கோட்டையில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு வந்தார்.
அவர், திருப்பத்தூர் வழியாக வந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கண்டவராயன்பட்டி காவலாளர்கள் அந்த லாரியை கைகாட்டி மடக்கினர். லாரியும் நிறுத்தப்பட்டது. பின்னர், அந்த லாரியையும், ஓட்டுநரையும் சோதனையிட்டனர்.
அந்த சோதனையில் லாரியில் மணல் அள்ளிவரப்பட்டது தெரிந்தது. பின்னர், இதுகுறித்து ஓட்டுநரிடம் ஆவணங்கள் கேட்கப்பட்டது. ஆனால், அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.
அதன்பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் அள்ளி வரப்பட்டதும். அவை விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து கண்டவராயன்பட்டி காவல் நிலைய துணை சார்பு - ஆய்வாளர் குமார், லாரியை ஓட்டிவந்த ஓட்டுரர் கார்த்திகராஜா மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தார். அந்த லாரியையும் பறிமுதல் செய்தார்.