பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவதற்கே இந்த கூடுதல் கட்டணம் என்று காரணம் சொல்கிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 30 கி.மீ. தொலைவுக்குட்பட்ட கிராமங்களுக்கு அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், கிராமப்புற பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் பயனடைந்து வருகின்றனர்.

பெரும்பாலான கிராமப் புறங்களுக்கு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பல்வேறு தரப்பினரும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் நகரப் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.

இதில், கிலோ மீட்டருக்கு ஏற்றவாறு ரூ. 3 முதல் ரூ. 10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு எவ்வித கட்டண உயர்வும் அறிவிக்காத நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் கடந்த சில நாள்களாக பயணிகளிடம் ரூ. 1 முதல் ரூ. 2 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதாவது, ரூ. 5 கட்டணமாக வசூலிக்கப்படும் கிராமங்களுக்கு தற்போது ரூ. 6 என வசூலிக்கப்படுகிறது. இதனால், நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திடீர் விலை உயர்வால் திகைத்து வருகின்றனர்.

இதுகுறித்து, பயணி ஒருவர் கூறியது: “பெரம்பலூரில் இருந்து அரசு நகரப் பேருந்தில் வாலிகண்டபுரத்திற்கு சென்று வருகிறேன். வாலிகண்டபுரத்திற்கு ரூ. 7 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 9 வசூலிக்கப்படுகிறது. நடத்துநரிடம் கேட்டால், உரிய பதில் அளிக்க மறுக்கிறார்” என்று அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தது:

“பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழகத்தில் அதிகமாக வசூல் ஈட்டவும், போக்குவரத்துக் கழக கோட்டத்தில் அதிக வசூல் பெறும் கிளை என்ற நல்ல பெயரை உயர் அதிகாரிகளிடம் பெறவும் பெரம்பலூர் கோட்ட மேலாளரும், கிளை மேலாளரும் கூடுதல் கட்டணம் வசூலிக்க நடத்துநர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.