தமிழ்நாட்டில் பணிபுரியும் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தடுத்தக்கட்ட தேர்தல்களுக்கு நாடு தயாராகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அந்த வகையில், தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், ஆந்திர மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதியும், கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பணிபுரியும் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலத் தொழிலாளர்களுக்கு வாக்களிக்க விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Andhra pradesh Election 2024: 41 சதவீதம் உயர்ந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சொத்து மதிப்பு!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாக்குரிமை உள்ள தினக்கூலி/தற்காலிக/ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அவர்கள்தம் சொந்த மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, 135(B)-ன் கீழ் அந்தந்த தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தமிழ்நாட்டில் தங்கி பணிபுரியும் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஓட்டுரிமை உள்ள தொழிலாளர்கள் புகார் அளிக்க ஏதுவாக தொழிலாளர் துறை சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.