பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் போராட்டம்...
கரூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். கணேசன், மாவட்டத் தலைவர் என். ராஜூ ஆகியோர் தலைமை வகித்தனர்.
செயலாளர் கா.கந்தசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி. ஜீவானந்தம், பொருளாளர் சி. முருகேசன், கட்டுமான சங்கத் தலைவர் அ. காதர் பாட்ஷா, டாஸ்மாக் சங்கச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இதில், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எம். சுப்ரமணியன், செயலாளர் கே. சக்திவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில், "ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.11 ஆயிரத்து 236.16 வழங்க வேண்டும்,
7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் 1.1.2016 முதல் ஓய்வுபெறும் துப்புரவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பணிக்கொடை வழங்கிட வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.