உள்ளாட்சி ஊழியர்களையும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் - ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தீர்மானம்...
வேலூர்
உள்ளாட்சியில் பணிபுரியும் ஊழியர்களையும் தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
வேலூர் மாவட்டம், வந்தவாசியில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் வந்தவாசி வட்டக் கிளை சார்பில் ஓய்வூதியர்கள் தின விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கிளைத் தலைவர் எ.கமாலுதீன் தலைமைத் தாங்கினார். மாவட்டத் தலைவர் எம்.கே.கோவிந்தசாமி, மண்டலச் செயலர் எம்.மணி, கிளைத் துணைத் தலைவர் பி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளைத் துணைத் தலைவர் பி.குலசேகரன் வரவேற்றுப் பேசினார். வந்தவாசி ஊராட்சி ஒன்றிய மேற்குத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் எ.வேளாங்கன்னி சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில், "ஓய்வூதியர்களுக்கென தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு இலவசப் பேருந்து அட்டை வழங்க வேண்டும்.
வந்தவாசி கோட்டை மூலைப் பகுதியில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும்.
உள்ளாட்சியில் பணிபுரியும் ஊழியர்களையும் தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த விழாவில் ஏராளமான கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் ஓய்வூதியர்கள் சங்கத்தின் கிளைச் செயலர் எஸ்.நடேசன் நன்றித் தெரிவித்தார்.