TASMAC : மூன்றே நாளில் இத்தனை கோடியா..? ஹாலிவுட் படத்துக்கே டப் கொடுத்த 'மதுப்பிரியர்கள்' !!
பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கமானது ஆகும். இந்த பொங்கலுக்கு மற்ற சாதனைகளை அடித்து நொறுக்கி, டப் கொடுத்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மதுப்பிரியர்கள்.
தன்னுடைய ஒவ்வொரு வருடத்தின் சாதனையை தானே முறியடித்து வருகிறார்கள் மதுப்பிரியர்கள். வழக்கமாக பண்டிகை நாட்களில் துணிக்கடைகளில் எப்படி கூட்டம் அலைமோதுகிறதோ, அதே போல மதுபானக்கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகளவு நடைபெறும். அதுமட்டுமின்றி தற்போது ஊரடங்கு வேறு இருப்பதால் சாதாரணமாக விற்பனை ஆவதை விட, அதிகமாகவே மது விற்பனை ஆகிறது.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 680 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. பொங்கலுக்கு மறு தினமான நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு. எனவே, இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் மதுபிரியர்கள் நேற்றே இரண்டு நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துள்ளனர். ஜனவரி 12 ஆம் தேதி ரூ.155.06 கோடிக்கும், ஜனவரி 13 ஆம் தேதி ரூ.203.05 கோடிக்கும், ஜனவரி 14 ஆம் தேதி 317.08 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. கோலிவுட் என்ன ? ஹாலிவுட் படத்துக்கே டப் கொடுத்து, அசர வைத்து இருக்கிறார்கள் தமிழ்நாட்டின் மதுப்பிரியர்கள்.