Light Monsoon rains likely in Chennai in next 3 days

வெப்பச்சலனம் காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இன்னும் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மழையின் அளவு அதிகரித்து கனமழை பெய்ய தொடங்கியது. இரண்டு மணி நேரம் நல்ல மழை பெய்தது. மேலும், சென்னையில் பத்தே நிமிடங்களில் 4 செமீ மழை பெய்துள்ளது. சுமார் ஒரு மணி நேரத்தில் 7 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்ததால் இவ்வருடத்தில் இதுவரை ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழைப்பொழிவு இது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் வேகம் காரணமாக வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் அதிகபட்சமாக சென்னையில் 8 சென்டிமீட்டர் மழையும் காஞ்சிபுரத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், குன்னூரில் 10.7 மிமீ மழையும், கொடைக்கானலில் 10.6 மிமீ மழையும், திருத்தணியில் 54.2 மிமீ மழையும், வால்பாறையில் 4 மிமீ மழையும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.