நீதிபதியை விமர்சனம் செய்த வைகோவுக்கு வழக்குரைஞர்கள் கண்டனம்…
திருச்சி,
ஜெயலலிதா மரணம் பற்றிய நீதிபதியின் கருத்து குறித்து விமர்சனம் செய்த வைகோவிற்கு கண்டனம் தெரிவித்து வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்” என்றும் தனது கருத்தைத் தெரிவித்து இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நீதிபதியின் கருத்து குறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்து, நீதிபதியின் கருத்திற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் நீதிபதியின் கருத்தை விமர்சனம் செய்த வைகோவை கண்டித்து திருச்சியில் வழக்குரைஞர்கள் நேற்று பகல் 1 மணி அளவில் நீதிமன்றம் முன்பு திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞர் பாவாணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வைகோவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதில் பல வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
வழக்குரைஞர்கள் முன்னறிவிப்பின்றி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் காவல் நிலைய ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் காவலாளர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
வழக்குரைஞர்கள் சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தி, தங்களது கண்டனைத்தை தெரிவித்துவிட்டு தாமாகவே கலைந்து சென்றுவிட்டனர்.