land registration ban turned against general public

போகிற போக்கில் யாரோ ஒருவர் அணைக்காத தீக்குச்சியை வீசிவிட, ஊழி தீ பிடித்தெறிந்து வனமே சாம்பலாகிவிடும். அதேபோல்தான் பொதுநல வழக்குகளும். பொதுவாக நல்ல நோக்கில்தான் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் சில நேரங்களில் இவைகளால் பொதுமக்களே நொந்து நூடுல்ஸ் ஆகுமளவுக்கு சிக்கல்கள் கிளம்பிவிடும். 
இதற்கு லேட்டஸ்ட் உதாரணம், வீட்டு மனை விற்பனையில் விழுந்த தடை. ஒரு இன்ச் நிலம் கூட வில்லங்கத்தினுள் அடங்காமல் மிக நியாயமான நிலத்தை வைத்திருந்தவர்களும் இந்த பிரச்னையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

நிலத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நடத்தப்பட வேண்டிய எத்தனையோ திருமணங்கள், ஆபரேஷன்கள், புதிய பிஸ்னஸ்கள் தடைபட்டு நிற்கின்றன. 

இந்நிலையில் அங்கீகரிக்கப்படாத மனைகளை வரைமுறைப்படுத்த அரசாணைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ‘மக்களுக்காக இந்த அரசு, மக்களாலேயே இந்த அரசு’ என்று பஞ்ச் டயலாக் பேசும் அரசாங்கத்தின் அந்த அரசாணை ஹைலைட்ஸ்களை பார்த்து மிஸ்டர் பொதுஜனத்தின் மைன்ட் வாய்ஸ் இப்படித்தான் புலம்புகிறது...

1. ஆறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் வீட்டுமனைகள் அமைப்பதற்கு தடை. (மணல் காண்ட்ராக்டர்ஸ் ஆறுமுகசாமியும், கே.சி.பி.யும் ரெண்டு ஆட்சியிலேயும் ஜே.சி.பி.யை வெச்சு அள்ளு அள்ளுன்னு அள்ளுன பிறகு ஆறும், குளமும் எங்கேய்யா இருக்குது? வெறும் குழிதானே இருக்குது!)

2. தொடர்ந்து வேளாண்மை செய்வதற்கு தகுதியான நிலங்களில் வீட்டுமனை அமைக்க தடை. (மழைதண்ணி இல்ல, எந்த அணையையும் தூர் வார உங்களுக்கெல்லாம் மனசுமில்ல. இந்த லட்சணத்துல தொடர்ந்து வேளாண்மை வேறு செய்யணுமா நாங்க?)

3. கோயில்கள், வஃபு வாரிய நிலங்களில் வீட்டுமனைகள் அமைக்க தடை. (செம காமெடிங்க. சிவன் சொத்து, அல்லா சொத்து, ஜீசஸ் சொத்துன்னு எம்மதத்து சொத்துக்களும் உங்க பாக்கெட்லேயும், உங்க பினாமிங்க பாக்கெட்லேயும்தானே இருக்குது. அத எப்படிங்க நாங்க மனையாக்க முடியும்?)

4. உரிமம் இல்லாத காலி மனைப் பகுதியில் வீட்டு மனைகள் அமைக்க தடை. (அமைச்சரண்ணே, யாராச்சும் உங்க மாவட்டத்துல அப்படியெல்லாம் காலி மனைகளை விட்டு வெச்சிருக்கீகளா? என்ன!)

5. பயன்பாட்டில் இல்லாத விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற வேளாண் இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டும். (இதுக்கு வேளாண்மை அமைச்சருக்கும், அந்த அதிகாரிகளுக்கும் எம்புட்டுண்ணே கொடுக்கணும்?)

6. பத்திரப்பதிவு செய்ய சதுர மீட்டருக்கு மாநகராட்சி பகுதிகளில் 100 ரூபாய் கட்டணம் நிர்ணயம். (ரசீதுல போட நூறு ரூபாய், ஓ.கே. ஆனா அதிகாரிங்க வாய்ல எவ்வளவு போடணும்?)

7. மாநகராட்சி பகுதிகளில் நிலங்களை வரையறை செய்ய வளர்ச்சிக் கட்டணமாக 600 ரூபாய் செலுத்த வேண்டும். (நாங்க சம்பாதிக்கிற பணமெல்லாம் உங்க குடும்பங்களுக்கான வளர்ச்சி நிதிதானுங்களே எசமான்! இதுல தனியா வேறேயா? வெளங்கிடும்.)

8. சந்தை மதிப்பில் 3 சதவீதம் செலுத்தினால் மனைகள் அங்கீகரித்து வரையறை செய்யப்படும். (அப்போ கள்ளச்சந்தை மதிப்புல எம்புட்டு சதவீதம்ணே?)

9. மனை பகுதியில் பாசன கால்வாய்கள் இருந்தால் அதை சேதப்படுத்த கூடாது. (இருந்தால்தானே? நாம என்னைக்கு பாசனத்துக்கெல்லாம் கால்வாய் கட்டிக் கொடுத்தோம்! ரெக்கார்டுல மட்டும் கட்டப்பட்டு, நிதி உங்க பாக்கெட்ல தடையில்லா பாசனமா பாய்ஞ்சுடுச்சே. 

மிஸ்டர் பொதுஜனம்...மைன்ட் வாய்ஸ்ல பேசுறதா நினைச்சு இவ்வளவு நேரமும் சத்தமாதான் பேசிட்டிருக்கீங்க!