நில மோசடி வழக்கு - மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு மணி நேரம் விளக்கமளித்தார் நடிகர் நாசர்...
காஞ்சிபுரம்
நடிகர் சங்க நில மோசடி வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு வந்த நடிகர் நாசர் இதுகுறித்து இரண்டு மணி நேரம் விளக்கமளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேடமங்கலத்தில் நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான 29 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளான நடிகர் சரத்குமாரும், ராதாரவியும் மோசடி செய்துள்ளனர் என்று புகார் அளிக்கப்பட்டது. பின்னர், இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய அதிரடியாக உத்தரவிட்டது.
இதனையடுத்து, தற்போதைய நடிகர் சங்கத் தலைவர் நாசர் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேற்று தனது வழக்கறிஞருடன் வந்தார்.
பின்னர், மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்களிடம் உரிய ஆவணங்களை வழங்கினார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு அந்த ஆவணங்கள், வழக்கு தொடர்பான விவரங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அதன்பிறகு, வெளியே வந்த நாசர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.