பேருந்து சக்கரத்தின் அடியில் சிக்கி கூலித் தொழிலாளி பலி; உடன் வந்தவருக்கு பலத்த காயம்....
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் பேருந்தை முந்தி செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித் தொழிலாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்தவர் பலத்த காயம்டைந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள திருவரங்கம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவருடைய மகன் முருகானந்தம் (24). இவர் தனது நண்பரான சத்திரக்குடி சமத்துவபுரம் வேலுச்சாமி மகன் ராஜேஷ்கண்ணன் (21) என்பவருடன் இராமநாதபுரம் இரயில் நிலையத்திற்கு மற்றொரு நண்பரை வழியனுப்ப மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
கூலித் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் இராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானம் அருகில் வந்தபோது முன்னால் சென்ற தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக பேருந்தில் அடிபட்டு கீழே விழுந்தனர். இதில் முருகானந்தம் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியானார். ராஜேஷ்கண்ணன் பலத்த காயம் அடைந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த இராமநாதபுரம் நகர் காவலாளர்கள் வழக்குபதிந்து தனியார் பேருந்து ஓட்டுநர் இளையான்குடி மாணிக்கவாசகர் நகர் நாகராஜன் மகன் மோகன் (32) என்பவரை கைது செய்தனர்.