தொழிலாளர் நல நிதித் தொகையினை வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் - தொழிலாளர் நல நிதி வாரியம்...
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குரிய 2017-ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நல நிதி வாரியத்தின் ஆய்வாளர் எஸ்.மைவிழிச்செல்வி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972-இன் படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு, தமிழக அரசு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தொழிலாளர் நல நிதிச் சட்டம் பிரிவு 2 (டி) இன் படி, தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்டம் உள்ளிட்ட கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி வாரியத்தில் பங்குத் தொகை செலுத்த வேண்டும்.
இதில், தொழிலாளரின் பங்காக 10%, வேலையளிப்பவர் பங்காக 20% சேர்த்து ஆக மொத்தம் 30% வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையாக அந்தந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டும்.
அதனடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
வருடத்தில் 30 நாள்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதியை வேலையளிப்பவர் கட்டாயம் செலுத்த வேண்டும்.
தொழிலாளர் நல நிதி செலுத்தத் தவறும்பட்சத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 28-இன் படி வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அத்தொகையை அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகவே, 2017-ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் வங்கி வரைவோலையாக அனுப்பி வைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.