kolathur police inspector periya pandi shot dear in rajasthaan
சென்னை கொளத்தூரில் நகை கடையில் நூதன முறையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ராஜஸ்தானில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது கொளத்தூர் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த மாதம் 16ம் தேதி கொளத்தூர் புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் மேற்கூரையில் துளை போட்டு 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து ராஜமங்கலம் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். ராஜஸ்தானை சேர்ந்த நாதுராம், தினேஷ் செளத்ரி உள்பட 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதை அடுத்து தமிழக தனிப்படை ராஜாஸ்தானுக்கு சென்றது.
கொள்ளைக்கு உதவி செய்ததாக நாதுராமின் தந்தை சென்னா ராம், உறவினர்கள் கேலா ராம், சங்கர் லால், தவ் ராம் ஆகியோரை கைது செய்து சென்னை கொண்டுவந்து விசாரணைக்கு பிறகு போலீசார் சிறையிலடைத்தனர்.

இதையடுத்த தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் நாதுராம், தினேஷ் செளத்ரி ஆகியோரை பிடிக்க தனிப்படை தொடர்ந்து ராஜஸ்தானிலேயே முகாமிட்டடிருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை பதுங்கியிருந்த கொள்ளையர்களை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் கொளத்தூர் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொரு ஆய்வாளர் முனி சேகர் துப்பாக்கி சண்டையில் படுகாயமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தமிழக போலீசார் இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் ராஜஸ்தான் விரைந்துள்ளனர். இந்த கொள்ளை குறித்து தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் விசாரணை செய்தபோதும், கொள்ளையர்களை பிடிப்பதற்கும் அம்மாநில போலீசார் என்தவிதமான உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
