சம்பள பாக்கியை கேட்ட கொத்தனாருக்கு கத்திகுத்து; கழுத்து, முதுகில் பலத்த காயத்தோடு தீவிர சிகிச்சை...
கடலூர்
கடலூரில் சம்பள பாக்கியைக் கேட்ட கொத்தனாரை கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தியதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம், முதுநகர் அருகே உள்ளது சின்னகாரைக்காடு. இங்குள்ள முருகன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (37). இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் தச்சு வேலை செய்து வருகிறார்.
இவர் சின்ன காரைக்காடு, அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சாரங்கன் (45) என்பவரை கொத்தனார் வேலைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அனைத்து வேலையும் முடிந்த பிறகு சாரங்கனுக்கு தரவேண்டிய கூலியில் ரூ.300-ஐ பாக்கி வைத்துள்ளார் பன்னீர்செல்வம்.
இந்தப் பணத்தை பலமுறை பன்னீர்செல்வத்திடம் கேட்டுள்ளார் சாரங்கன். இருந்தாலும் ஒருமுறை கூட பன்னீர்செல்வம் பணத்தை தர முன்வரவில்லை.
இதனால், மன உளைச்சல் அடைந்த சாரங்கன், பன்னீர்செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரிடம் பாக்கி வைத்துள்ள சம்பளத்தை தரும்படி கராராக கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
இதில், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் வீட்டுக்குள் ஒடிப்போய் கத்தியை கொண்டுவந்து சாரங்கனை சதக்... சதக்... என்று சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சாரங்கனின் இடது கழுத்து, முதுகு, இடது முன் கைவிரல் போன்ற இடங்களில் கத்திகுத்து ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
பின்னர் அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சாரங்கனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் காவலாளர்கள் வழக்குப்பதிந்து சம்பள பாக்கியை கேட்ட சங்கரனை, கத்தியால் குத்திய குற்றத்திற்காக பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.