திருச்சி
பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அமராவதி ஆற்றின் நீர்வரத்தை முற்றிலும் தடுக்கும் கேரளாவின் நடவடிக்கையை மத்திய அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில விவசாய சங்க பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மாநில விவசாய சங்கத்தின் பொதுக் குழுகூட்டம் நேற்று திருச்சியில் நடைப்பெற்றது. இதற்கு மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கிடசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் இராமசாமி முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
“வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். விவசாயிகள் வங்கியில் வாங்கி உள்ள பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதுடன், எதிர்வரும் ஆண்டில் சாகுபடி மேற்கொள்வதற்கு வசதியாக வட்டி இல்லாத பயிர் கடனும், மானியமும் வழங்க வேண்டும்.
வறட்சியால் கால்நடைகள் தீவனம் இன்றி அவதிப்படுவதால் வெளி மாநிலங்களில் இருந்து தேவையான கால்நடை தீவனங்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
நிலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு வேளாண்மை துறை எந்திரங்களை பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.
நீராதாரம் பாதிக்கப்படுவதால் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் வேலையை கேரளா தொடங்கி விட்டது. இதனால் அமராவதி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபடும். எனவே மத்திய அரசு இதனை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தின் மிகப்பெரிய பாசன பரப்பான கீழ் பவானி பாசன நிலத்தில் உள்ள நீண்டகால பயிர்களான தென்னை, மா போன்ற பயிர்களை காப்பாற்ற நீலகிரி மாவட்டத்தில் 12 அணைகளில் தேக்கி வைக்கப்பட்டு உள்ள நீரை திறந்து விட வேண்டும்” போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாநில செயலாளர் ஜெய்லானி, காவிரி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் ராஜாராம், தீட்சதர் பாலசுப்பிரமணியன் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
