இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில், மூன்று தொகுதிகளிலும் வாக்களித்த 2,09,257 வாக்காளப் பெருமக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளார்.

புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், அருமை நண்பர், புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மூன்று தொகுதிகளின் இடைத் தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது ஒன்றும் ஆச்சரியமோ, புதுமையோ இல்லை. அதிகார பலம் மற்றும் துஷ்பிரயோகம், தேர்தல் ஆணையத்தின் மறைமுக ஆதரவு, அங்கிங்கெனாதபடி எங்கும் பண விநியோகம் ஆகியவற்றுக்கு முன்னால், தி.மு.கழகத்தின் கடின உழைப்பு முக்கியமானதாகக் கருதிப் பார்க்கப்படவில்லை.

நாளை விளையும் நன்மையை விட, இன்று கைக்குக் கிடைக்கும் வாய்ப்பை எண்ணிக் களிப்புறும் போக்கு, ஆக்க பூர்வமான எதிர்காலத்திற்கு அடிப்படையாகாது என்பதை அனைவரும் உணர வேண்டுமென விரும்புவதாக தெரிவித்த அவர், பணநாயகம் மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது. அதுவே இந்த இடைத்தேர்தல். செயற்கையான இந்தவெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது என கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.