தீவிர சிகிச்சையில் கருணாநிதி; கோபாலபுரம் இல்லத்திற்கு கூடுதல் டாக்டர் குழு வருகை!
திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர். உடல் நலக்குறைவால் வீட்டில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை கூடுதலாக கவனித்து கொள்ளவும், உடல்நிலையை பரிசோதிக்கவும் காவேரி மருத்துவமனை மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். குடும்ப மருத்துவர் கோபாலும் வந்துள்ளார். கருணாநிதியுடன் ஸ்டாலின் மற்றும் மகள் செல்வியும் உடன் உள்ளனர்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு தற்போது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டு இருக்கிறது. அவருக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது உடலின் சிறுநீரக பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு வீட்டில் இருந்த படியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் ஜி.கே.வாசன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் சந்தித்தனர். மேலும் திமுக தலைவர் கருணாநிதியை பார்ப்பதற்காக கோபாலபுரம் இல்லத்தின் முன் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் அனைவரும் கலைந்து செல்லும்படி திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் அவரை பார்ப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொண்டர்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் கோபாலபுரம் செல்லும் சாலை தடுப்புக்கள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது. பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.