மருத்துவமனையில் கருணாநிதி - டி.வி.யில் பார்த்த தி.மு.க. அவைத் தலைவர் மாரடைப்பால் மரணம்...
கோயம்புத்தூர்
கருணாநிதியின் உடல்நிலை குறித்து தொலைக்காட்சியில் பார்த்த குள்ளக்காபாளையம் ஊராட்சி, 4-வது வார்டு தி.மு.க.வின் அவைத் தலைவர் நள்ளிரவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் குள்ளக்காபாளையம் ஊராட்சி, 4-வது வார்டு தி.மு.க. அவைத் தலைவர் அம்சகுமார். 62 வயதான இவர் தி.மு.க.வின் நீண்டகாலத் தொண்டர். இவருக்கு நாகரத்தினம் என்ற மனைவியும், மாரிமுத்து என்ற மகன் மற்றும் உமா மகேஸ்வரி என்ற மகள் உள்ளனர்.
தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கட்சி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தவறாது கலந்து கொள்வார். அது எந்த ஊராக இருந்தாலும் சென்றுவிடுவாராம். அந்த அளவுக்கு தீவிர தொண்டர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலைக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை அறிந்ததில் இருந்து மனமுடைந்து போனார் அம்சகுமார். கடந்த இரண்டு நாட்களாக வீட்டில் டி.வியில் கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளை பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது கருணாநிதியின் உடல்நிலை சீரியஸ் என்று தகவல் வெளியிடவும், தொலைக்காட்சிகளில் கருணாநிதியின் வரலாற்று சிறப்புகளை நிகழ்ச்சிகளாக போடவும் மிகுந்த மன இறுக்கத்திற்க் ஆளானார் அம்சகுமார். திடிரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சரியாக சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் இறந்த அம்சகுமார் உடலுக்கு மறுநாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணித் துணை அமைப்பாளர் மோகன் வீரகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.