Karna who never searched for
உச்ச நீதிமன்றத்தால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்ய சென்னையில் முகாமிட்டு கொல்கத்தா போலீசார் 4வது நாளாக வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய கர்ணன் கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம், தானாகவே நீதிபதி கர்ணன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.
இதனால் ஆத்திடமடைந்த கர்ணன் நீதிபதிகள் ஆஜராகவில்லை என்பதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜகதீஸ் சிங் கெஹர், தீபக் மிஸ்ரா, ஜலமேஷ்வர், ரஞ்சன் கோகை, மதன் பி.லோகூர், பினாகி சந்திரகோஷ், குரியன் ஜோசப் உள்ளிட்ட 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.
இதனால் அதிர்ச்சியுற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து கோல்கத்தா போலீசார் கர்ணனை தேடி சென்னை வந்தனர். ஆனால் அவரது செல்போன் சிக்னல் ஆந்திர மாநிலம் தடாவில் காட்டியது.
கோல்கத்தா போலீசாரும் சென்னை போலீசாரும் தடா சென்று பார்த்த பொது கர்ணன் அங்கு இல்லை.சூலூர் பேட்டை வரை சென்று விட்டு ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.
இந்நிலையில், 6 மாத சிறைத்தண்டனை திரும்ப பெற கோரி நீதிபதி கர்ணன் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி கர்ணன் தரப்பில் வழக்கறிஞர் மேத்யூ இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், உச்சநீதிமன்ற உத்தரவு தனது அடிப்படை உரிமையை பறிப்பதாகும் எனவும், வெளிநாடு செல்லவில்லை என்றும், எங்கும் ஓடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நீதிபதிகளின் மீது தான் குற்றஞ்சாட்டினேன், நீதிமன்றத்தின் மீது அல்ல. எனவே தன் மீது அவமதிப்பு வழக்கு ஏன் என நீதிபதி கர்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கொல்கத்தா போலீசார் சென்னையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். அவர்கள் நீதிபதி கர்ணனை கைது செய்வது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நீதிபதி கர்ணனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறை எண் 3 தற்போது வரை காலி செய்யப்படவில்லை. அங்கு வக்கீல்கள் சிலர் தங்கியுள்ளனர்.
மேலும், 4 நாட்களாக தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணனை கைது செய்வதற்காக கொல்கத்தா போலீசார், சென்னையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
