முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க.முத்து உடல்நலக் குறைவால் இன்று காலை உயிரிழந்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, பத்மாவதி தம்பதியரின் மூத்த மகனான மு.க.முத்து தமிழில் அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தவர். இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியைத் தழுவியதால் திரைத்துறைக்கு முழுக்கு போட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தந்தை கருணாநிதி தமிழகத்திற்கே முதல்வராக இருந்த போதிலும் தொடர்ந்து அவரது கருத்துகளுடன் முரண்பட்டே இருந்து வந்ததாகவும், இதன் காரணமாகவே கருணாநிதியிடம் இருந்து விலகி இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே மு.க.முத்து எந்தவித அரசியலிலும் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் 77 வயதான மு.க.முத்து கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மு.க.முத்துவின் உடல் அவரது சொந்த வீட்டில் உறவினர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மு.க.முத்துவின் இறுதிச் சடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.