முன்னாள் நீதிபதி கர்ணன் மனு மீண்டும் தள்ளுபடி!! கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் நீதிபதி சி.எஸ்.கர்ணன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தபோது பல்வேறு நீதிபதிகள் ஊழல் செய்வதாக கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் பகிரங்கமாக கடிதங்கள் எழுதினார்.
மேலும், நீதிபதிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தார். பல உத்தரவுகளையும் பிறப்பித்தார். இதனால் உச்சநீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. பின்னர், கடந்த மே மாதம் 9-ந்தேதி சி.எஸ்.கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து கர்ணன் கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில், உச்சநீதிமன்றதில் சுட்டிக்காட்டப்பட்ட அதே காரணங்களை குறிப்பிட்டு, கொல்கத்தா உயர்நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனைக்கு ரத்து செய்ய மறுத்து விட்டது.