முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கில் நாளை தீர்ப்பு!
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகவுள்ளது
![Judgment in former special DGP Rajesh das appeal case tomorrow smp Judgment in former special DGP Rajesh das appeal case tomorrow smp](https://static-ai.asianetnews.com/images/01h31ky4evrt6z8wnfm9qe213v/Rajesh-Das-1686902870491_363x203xt.jpg)
தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வடமாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்டஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன்பின்னர் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக, ராஜேஷ் தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம், செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
ஏப்.16ஆம் தேதி மக்களவைத் தேர்தல்? தேர்தல் ஆணையம் விளக்கம்!
இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இருவரும் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ராஜேஷ்தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும்வரை, விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க தடை கேட்டுள்ளதாகவும் தெரிவித்து வாதிட்டனர்.
இதனிடையே, வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில், ராஜேஷ் தாஸின் கோரிக்கையில் எந்த முகாந்திரமும் இல்லை. எனவே விழுப்புரம் நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதன்படி, ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டு மனு மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.