வேலூரில் பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு சுமார் 15 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் கொள்ளையடித்த வழக்கில் ஒருவரைப் பிடித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த 15 ஆம் தேதி நடந்த இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் கொள்ளை கும்பலைப் பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்டமாக நகைகடையை முழுவதுமாக சோதனை செய்த தனிபடை போலீசார், நகைகடை மற்றும் சுற்றியுள்ள பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். பின்னர் வேலூர் - காட்பாடி சாலை, வேலூர் - ஆற்காடு சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளும் விசாரணை வளைத்திற்குள் கொண்டு வரப்பட்டன. 

மேலும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் வேட்டையை நடத்தினர். மேலும், வேலூரில் உள்ள தங்கும் விடுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வீடுகள், மாவட்ட எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தினர். நகைக்கடை அமைந்துள்ள தோட்டப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனிடையே நகைக்கடையில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நகைக்கடை அமைந்துள்ள இடத்தின் அருகில் தங்கும் விடுதியின் கட்டுமானப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவதாக சொல்லபடுகிறது. இந்நிலையில் அந்த கட்டிடத்தில் தங்கியுள்ள வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்களிடம் கைரேகைகளை பதிவு செய்து, விசாரணை முடியும் வரை யாரும் எங்கேயும் செல்லக்கூடாது என எச்சரித்திருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சிக்கிய சிசிடிவி பதிவில், நகைக்கடை திருட்டு சம்பவத்தில் கடையின் பின்பக்கம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த சிங்க முகமூடி அணிந்த நபர் ஒருவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. மேலும் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட தளத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களை செயலிழிக்க செய்து அதன் பிறகு திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக தகவல்கள் வந்தன. மேலும், அவரது முகம் கண்காணிப்பு கேமிராவில் அடையாளம் தெரியாமல் இருக்க அவரது முகத்தில் முகமூடியும், கைகளில் கையுறையும் அணிந்தபடி உள்ளே வந்து 16 கிலோ எடையுள்ள தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. 

நகைக்கடைக்குள் நுழையும் மர்ம நபர் 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், மெலிந்த தேகத்துடன் இருப்பதால் அந்த வயதுடைய நபர்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பட்டியலை கொண்டு தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நகைக்கடையில் திருட்டுச் சம்பவம் நடந்து நேரத்தில் கடையின் சற்று தொலைவில் ஒரு ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக நிற்பது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் நடத்தியதில் அந்த ஆட்டோ உள்ளூரைச் சேர்ந்தது என்பதை கண்டுபிடித்தனர். 

மேலும் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் நகைக்கடையில் திருட்டுப்போன நகைகள் அவரிடம் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவற்றை கைப்பற்றி மதிப்பீடு செய்யும் பணிகள் நடந்து வருகிறதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திருடிய நகைகளை அவர் விற்க முயன்றபோது காவல் துறையினரிடம் சிக்கியதாகவும் கொள்ளை சம்பவத்தில் அவருடன் சேர்த்து வேறு யாரெல்லாம் ஈடுப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தனிப்படை போலீசார் கூறினர். நகை திருட்டு வழக்கில் பிடிப்பட்டுள்ள ராமன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.