சகோதரி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் மோடி - தனி விமானத்தில் வருகை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார். சசிகலா மற்றும் தம்பிதுரையிடம் தனது இரங்கலை பிரதமர் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு விமான தளத்திற்கு வந்த மோடி கார் மூலம் ராஜாஜி அரங்கம் சென்றார். அங்கு வைக்கபட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடலுக்கு மிகுந்த உருக்கத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து உடலின் அருகே இருந்த சசிகலாவின் தலையில் கை வைத்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அங்கே அழுது கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்டி அனைத்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து தனது கரங்களை கூப்பி அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் உடனடியாக மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.