ஜெ. கைரேகை வழக்கு; தேர்தல் ஆணைய செயலர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயலலிதா கைரேகை வைத்தது செல்லாது என திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணைய முதன்மை செயலர் வில்போர்டு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவை பார்ப்பதற்காக சென்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ,க்கள் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று ஜெ. நலமாக இருப்பதாக மீடியாக்களில் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சரவணன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஜெயலலிதா கைரேகை வைத்தது செல்லாது என வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக ஜெயலலிதா கைரேகை உண்மைதான என விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில், தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின்போது தேர்தல் ஆணைய முதன்மை செயலர் வில்போர்டு ஆஜராகி உள்ளார்.